1:33 AM

Warm and Wet

Posted by Unknown |


பல நூறடி ஆழத்திலிருந்து மெல்ல அது கிளம்பியது, புகை போல.

நேராக மேலேறிச் சென்று மூளையின் எல்லா மடிப்புகளையும்

தேடித்தேடித் தனக்குரிய வார்த்தைகளைப் பொறுக்கிக் கொண்டது.

இறகு போல் சுழன்று வந்து என் நாக்கின் மேற்பரப்பில் வந்தமர்ந்தது.

லாவகமாய் தொடுக்கப்பட்ட அம்பாக, உன்னைத் தாக்கி நிலைகுலையச்

செய்யும் என நான் நினைத்திருந்தேன். ஆனால்...

என்னை ஏமாற்றி, வாழ்நாளில் நான் கண்டிராத கனிவுடன்

உதிரும் மலர் போல மெத்தென வெளிவந்தது.

அப்போது நான உன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அத்தனை ஆழத்திலும் ஈரம் இருக்கிறது போலும்..,

இல்லை, அத்தனையுமே ஈரம் தானா!

இக் கவிதை என் நண்பர் பாலதீபக்கிற்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு.

பிறன் மனை நோக்காதது பேராண்மை என்றார் வள்ளுவர்

ஆனால், பிறன் மனை எனை நோக்கும் போது

என் சாதா ஆண்மையும்

விழித்துக் கொள்கிறதே, நான் என்ன செய்வது?

சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய இக் கவிதை - அய்யப்ப சீசனை முன்னிட்டு மீண்டும் ஒரு முறை....



புலன்களை அடக்கி, புனித நீராடி

நாளுக்கு நூறு முறை ”அவன்” பெயர் சொல்லி

”அவனையே” போற்றிப் பாடி

காலணி துறந்து கால் நடை நடந்து

மனிதக் கூட்டத்தில் நுழைந்து

முண்டியடித்து ”அவன்” முகத்தை

தீர்க்கமாய் முப்பது வினாடிகள் பார்த்தேன்.

எனக்கு இன்னமும் கொஞ்சம் சந்தேகம்.


கோவிலின் வாசலில், இரண்டு கைகளையும்

இழந்த சிறுமி, வாயினில் தூரிகை கவ்வி

குவிந்த முனைப்புடன் தளராத உறுதியுடன்

மும்முரமாய் ஓவியம் வரைகிறாள்.

அவளின் விரிந்த விழிகளையும்

கொஞ்சமும் நடுங்காத உதடுகளையும்

வியந்து பார்த்தேன்

சந்தேகமேயில்லை

நம்பிக்கை தான் கடவுள்.

நம்பிக்கை மட்டுமே கடவுள்.

ீஇது விழா பற்றிய  பதிவு அல்ல.  அரஙகிற்கு வெளியே ஒலித்தகடு விற்குமிடத்தில் நின்று கொண்டிருந்தேன் . வைகோு,தமிழருவிமணியன்,  கண்ணதாசன் என்று பலருடைய ஒலித்தகடுகள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. இது விற்பவருக்கும் வாங்கும் ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல்:

"சார், தமிழருவி மணியன்  வாங்கிக்கிங்க"
'வேண்டாங்க, அவருது ஒரு தடவைக்கு மேல கேக்க முடியாது'
'இதப் பாருங்க, வைரமுத்துது. மூணு மண்ணேரம் பேசுவார்'
'மூணு மண்ணேரமா!'
'ஆமாங்க, கலாமோட அக்னி சிறகுகள்  பத்தி பேசுனது'
'அந்த புக்கையே அப்பிடியே படிச்சிட்டாரா?'
'இல்லீங்க,  அந்த புக்கில இருக்கிற மேட்டர் தான்'
'கலாம் பேசுனது இல்லியா?'
'இந்த மேட்டர அவர் பேசுறத விட இவுர் பேசறது தான் நல்லா  இருக்கும்.இவரு நல்லா ஏத்தி எறக்கி பேசுவாரு."

கடந்த 20 வருடங்களில் நம்மைச் சுற்றி எவ்வளவோ மாற்றங்கள். அவை எல்லாம் இந்த நூற்றாண்டில் நம்மை, நம் வாழ்முறையை மாற்றியிருக்கின்றன. கீழ்க்கண்டவை உங்களுக்குப் பொருந்துமா?

  1. உங்களிடம் இரண்டு செல்ஃபோன்கள் இருக்கும். ஒன்றின் எண் மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.
  2. உங்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட ஈ-மெயில் முகவரிகள். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மெயில் வந்திருக்கிறதா எனப் பார்ப்பீர்கள். நடு இரவில் விழித்தால் ஒருமுறை.
  3. காலையில் எழுந்ததும் முதலில் தேடுவது உங்கள் கணவரையோ / மனைவியையோ அல்ல. உங்கள் செல்ஃபோனை.
  4. உங்கள் வீட்டு Land Line எண்ணை உங்களால் உடனே சொல்ல முடியாது.
  5. உங்கள் மகளை வேவு பார்க்க அவளுக்குத் தெரியாமல் அவளது செல்ஃபோனின் Call Duration களைப் பார்ப்பீர்கள்.
  6. உங்கள் மகனை வேவு பார்க்க அவனுடன் Face Book-லோ, orkut-லோ மாறுவேடத்தில் நண்பனாகி கண்காணிப்பீர்கள்.
  7. வீட்டில் நுழைந்த 5 நிமிடத்திற்குள் TV யின் ரிமோட் கிடைக்காவிட்டால் கொலைவெறி ஏற்படும்.
  8. 65 சேனல் எல்லாம் உங்களுக்குப் பத்தாது. 0-லிருந்து 65 வரை மூன்று முறையாவது சுற்றி, 'ஒரு ப்ரொக்ராம் கூட சரியில்ல' என்று திட்டி விட்டுத் தான் தூங்குவீர்கள்.
  9. 14+53+62-ன் விடையை கால்குலேட்டர் இல்லாமல் உங்களால் சொல்ல முடியாது.
  10. உங்கள் வீட்டருகில் தபால் அலுவலகம் எங்கு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது.

இவற்றில் 6க்கு மேல் உங்களுக்குப் பொருந்தும் எனில் நீங்கள் இந்த நூற்றாண்டில் வாழத் தகுந்தவர். இல்லையேல் நீங்கள் ஒரு மன நல மருத்துவரைப் பார்ப்பது உங்கள் கூட வாழ்பவருக்கு நல்லது.


எந்த சூழலையும் சாதகமாகப் பயன் படுத்த முடியும், நம் சிந்தனையில் புதுமை இருந்தால். அமெரிக்காவில் உள்ள Tees and tats என்ற T-சர்ட் விற்கும் நிறுவனம், T-சர்டின் விலையை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணைக் கொண்டு நிர்ணயிக்கிறார்கள். உதாரணத்திற்கு, சென்செக்ஸ் 10000 பாய்ண்டாக இருக்கும் பொழுது நீங்கள் Rs.500 கொடுத்து வாங்கும் சட்டைக்கு, அடுத்த 60 நாட்களுக்குள் ஒவ்வொரு 1000 பாய்ண்ட் குறைவிற்கும் Rs.50/= ஐ திருப்பிக் கொடுக்கிறார்கள். ( அதிக பட்சமாக - 7 முறை).

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் பார்த்தீர்களா?

2:08 AM

புது நோக்கு

Posted by Unknown |


இந்த பதிவிற்கு முதலில் 'வித்தியாசமான பார்வை' என்று தான் தலைப்பு கொடுக்க நினைத்தேன்.  தமிழில் மிகவும் பயன்படுத்தப்பட்டு நீர்த்துப் போன (பன்முறை **பழிக்கப்பட்ட) சொல் இந்த 'வித்தியாசமான' என்பதால் மாற்றி 

விட்டேன். சரி, விஷயத்திற்கு வருவோம். 


என்னுடைய பயிற்சி வகுப்புகளில் மாறுபட்ட சிந்தனையைத் தூண்ட தமிழ் "படமொழி" யைப் பயன்படுத்துவேன். உதாரணமாக இந்த படத்தைப் பாருங்கள்.
இதன் விடை : பச்சைத் தண்ணீர். - (பச்சை நிறத்தில் எழுதப்பட்ட தண்ணீர் என்ற வார்த்தை). புரிகிறது என்று நினைக்கிறேன். எழுதிய முறையிலோ, நிறத்தாலோ, அல்லது எழுதப்பட்ட இடத்தாலோ - அது எதை குறிக்கிறது என்று கண்டுபிடிப்பது. சுஜாதா கூட ஒரு முறை இதைப் பற்றி எழுதியிருக்கிறார். 

இப்போது இந்த இரண்டு படங்கள் சொல்வது எதைப் பற்றி?





வாரனாசியைச் சேர்ந்த இந்த டாக்ஸி டிரைவர் வித்தியாசமானவர். டாக்ஸி ஸ்டாண்டில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டு, பீடி கடித்துக் கொண்டிருக்காமல், வெளிநாட்டு டூரிஸ்டுகளுக்கு youtube மூலமாக தனது சேவைகளை விவரித்து விடியோவில் பேசுகிறார். Youtube உங்கள் மொபைலில் தெரியும் -GPRS அல்லது 3G  இருந்தால். வாரனாசிக்கு வரும் வெளிநாட்டுப் பயணிக்கு youtube பார்ப்பது மிக எளிதாக இருக்கும் - யாரையும் கேட்பதை விட.

 தொழில்நுட்பத்தின் உச்சம் என்பது அதன் பயன்பாட்டின் அதி எளிமை தான்.


ஒரு டாக்ஸி டிரைவரால் இதைச் செய்ய முடியும் எனில், நம்முடைய தொழிலில்
நம்மால் என்னென்ன செய்ய முடியும் அல்லது செய்ய வேண்டும் என்பதை ரூம் போடாமல் உட்கார்ந்த இடத்தில் யோசித்தால் கூட ஒரு 5 யோசனையாவது தோன்றும். முடிந்தால் செய்யுங்கள். இல்லையென்றால், யோசிக்காமல் என்னைக் கூப்பிடுங்கள். வந்து யோசிக்கச் சொல்லித் தருகிறேன்.