சில ஆண்டுகளுக்கு முன் எழுதிய இக் கவிதை - அய்யப்ப சீசனை முன்னிட்டு மீண்டும் ஒரு முறை....
புலன்களை அடக்கி, புனித நீராடி
நாளுக்கு நூறு முறை ”அவன்” பெயர் சொல்லி
”அவனையே” போற்றிப் பாடி
காலணி துறந்து கால் நடை நடந்து
மனிதக் கூட்டத்தில் நுழைந்து
முண்டியடித்து ”அவன்” முகத்தை
தீர்க்கமாய் முப்பது வினாடிகள் பார்த்தேன்.
எனக்கு இன்னமும் கொஞ்சம் சந்தேகம்.
கோவிலின் வாசலில், இரண்டு கைகளையும்
இழந்த சிறுமி, வாயினில் தூரிகை கவ்வி
குவிந்த முனைப்புடன் தளராத உறுதியுடன்
மும்முரமாய் ஓவியம் வரைகிறாள்.
அவளின் விரிந்த விழிகளையும்
கொஞ்சமும் நடுங்காத உதடுகளையும்
வியந்து பார்த்தேன்
சந்தேகமேயில்லை
நம்பிக்கை தான் கடவுள்.
நம்பிக்கை மட்டுமே கடவுள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக